இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டது.
இந்நிலையில், 6-வது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இந்த சிறப்பு விமானம் மூலம் 2 நேபாள குடிமக்கள் உள்பட 143 பேர் டெல்லி வந்தடைந்தனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.